பரவி வரும் டெங்கு நோயும் அதிலிருந்து எம்மை பாதுகாத்தலும்
டெங்கு எனப்படுவது ஒரு வகை வைரஸ் கிருமி.இது நுளம்புகள் மூலம் மனிதர்களிற்கு பரவி நோயுண்டாக்குகிறது.டெங்கு காய்ச்சல் இன்று வேகமாக பரவி வருகிறது எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நாடு முழுவதும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பரவுகிறது.குறிப்பாக வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை காணுகின்றோம்.வைத்தியசாலைகளிற்கு அநேகமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே வருகை தருவதை காண முடிகின்றது.எம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
எவ்வாறு பரவுகிறது?
ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள பகலில் கடிக்கும் நுளம்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.இந்த நுளம்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து மற்றவர்களிற்கு பரப்புகிறது.இந்த நுளம்பு அநேகமாக மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும்.
மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களாக பூச்சாடிகள்,பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது.
இந்நோயானது நேரடியாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களிற்கு பரவாது. நுளம்பின் மூலமே இந்நோய் பரவும் ஆகவே நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் என்பவற்றின் மூலம் பரவாது.
டெங்கு அறிகுறிகள்
திடீரென கடும் காய்ச்சல்
அதிகமான தலைவலி
எலும்புகளில் கடும் வலி
கண்களுக்கு பின்புறம் வலி
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்
வயிற்றுழைவு
தலைச்சுற்றல்
நோயாளியின் உணவு முறை
டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளையே அதிகம் உட்கொள்வது சிறந்தது.அதாவது தோடம்பழச்சாறு,பப்பாளிப்பழம்,காய்கறி சூப்,புரோட்டீன் உணவுகள்,கஞ்சி, இளநீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. நுளம்புகளை ஒழிப்பது ஒன்றே சிறந்த வழி. நுளம்பு பெருகாத வண்ணம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு செயற்பட வேண்டும்.
வீட்டிற்குள் நுளம்பு வர முடியாத படி பாதுகாத்தல்.நுளம்பு விரட்டி, நுளம்பு வலை என்பவற்றை பயன்படுத்தி நுளம்புக்கடியில் இருந்து தப்பித்தல்.
டெங்கு பரவாமல் தடுக்க ஒரே வழி நுளம்பு ஒழிப்பு தான்


Comments
Post a Comment